வியாழன், 12 மார்ச், 2015

செவ்வாய், 10 மார்ச், 2015

குமார தெய்வமும் குமாரர் வழிபாட்டு முறையும்.

மட்டக்களப்பு: குமார தெய்வமும் குமாரர் வழிபாட்டு முறையும். 
பகுதி -1

குமார தெய்வம் மட்டக்களப்பின்   பூர்விக குடிகளின் தெய்வம்”, 'மட்டக்களப்புக்கு மட்டும் உருத்துடைய சுதேச தெய்வம்" எனவும்  குறிப்பிடப்படுகிறது. தற்போதும் நிலவிவரும் இக் குமார தெய்வமும்> அத் தெய்வம் பற்றிய கதைகளும் – தொன்மங்களும் - பாடல்களும்> குமார தெய்வ வழிபாட்டு முறையான சடங்கும் தனித்துவம் மிக்கவை. 

கலாநிதி சி. மெளனகுரு அவர்களும் க. மகேஸ்வரலிங்கம் அவர்களும் குமாரர் மற்றும் குமார தெய்வச் சடங்கு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கலாநிதி சி.மெளனகுரு அவர்களின் மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்(1998) என்னும் ஆய்வு நூலிலும், க.மகேஸ்வரலிங்கத்தின் மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும் (2008) எனும் நூலிலும் பல விடயங்கள் விளக்கப்பட்டுள்ளது.

குமார தெய்வம்   மற்றும் குமார தெய்வச் சடங்கு பற்றிய ஆய்வு,  மட்டக்களப்பின் வரலாறு, மக்கள் இடப் பரவல், சமூகம் பற்றி அறிந்து கொள்ள உதவும். அது மட்டுமின்றி தமிழர்களின் தொன்மையான தெய்வங்கள் மற்றும்   வழிபாட்டு முறைகள் பற்றியும் அறிந்து கொள்ளவும் உதவலாம். மேலும் இலங்கையின் தொல் வரலாற்றில் இது விரை விளக்கமற்றிருக்கும் சில விடயங்கள் குறித்துத் தெளிவனைப் பெறவும் உதவலாம். குறிப்பாக இயக்கர் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ளவும் உதவலாம்.
மட்டக்களப்பில் குமார தெய்வத்தினை, குமாரர் அல்லது குமாரத்தன் என அழைப்பது பொது வழக்காகும். குமாரருக்குரிய வழிபாடு சடங்கு எனப்படுகிறது. அவ்வகையில் இவ்வழிபாடு குமாரத்தன் சடங்கு எனக் கிராம மக்களால் குறிப்பிடப்படுகிறது. குமாரரை முருகன் என அதனை வழிபடுவோரும், ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.


குமாரர் கோவில்கள்.
மட்டக்களப்பில் குமாரருக்கென அமைக்கப்பட்டிருந்த தனிக்கோயில்களாக மூன்றைக் குறிப்பிடலாம்.
1. தளவாய் குமாரர் கோவில்
2. ஜெயந்திபுரம் குமாரர் கோவில்.
3. கிரான் குமார கோயில்.

இம்மூன்று கோவில்களையும் விட குமாரருக்கான வேறு வழிபாட்டு இடங்களையும் அவதானிக்க முடிகிறது. முக்கியமாக மட்டக்களப்பில் திருப்படைக் கோவில்கள் என அழைக்கப்படுகிற முருகன் கோவில்களில் குமார தெய்வமும் குமார வழிபாடு இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
1. சித்தாண்டி முருகன் ஆலயம்
சித்தாண்டி முருகன் கோயிலின் மேற்கு வெளிவாசலில்> குமாரருக்கு என தனியான ஒரு கோவில் உண்டு. இக்குமாரருக்கு தனியான சடங்கும் நடைபெறுவதுண்டு.
2. மண்டூர் முருகன் ஆலயம்
மண்டூர் முருகன் ஆலயத்தின் உட்பிரவாகத்தில் சிறிய குமாரத்தன் கோவில் அமைந்துள்ளது.
இவற்றைவிட மட்டக்களப்பின் சில பகுதிகளில் நீண்ட காலமாக குமார தெய்வச் சடங்கு நடைபெற்றும் வருகிறது.
3. லாவணி அல்லது லாவணை
கிரான், சித்தாண்டி குமாரர் தெய்வம் லாவானை எனும் இடத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. லாவானை எனுமிடத்தில் முன்னர் இவ்வழிபாட்டு முறை நிலவியது எனவும், தற்போது மேடு ஒன்றில் குமார தெய்வச் சடங்கு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
4. முறுத்தானை கானந்தனை அக்குறாணி
முறுத்தானை, கானந்தனை, அக்குறாணி ஆகிய இடங்களில் குடியேறி வாழும் தமிழர்களாகி விட்ட வேடர்கள் மத்தியில் குமார தெய்வச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது எனினும், அது அவர்கள் மத்தியில் இவ்வழிபாடு பிரதானமானதொன்றாக இல்லை. அவர்களுடைய பிரதான தெய்வங்கள் வேறு.
குமார தெய்வம், குமார தெய்வ வழிபாட்டு முறைகள் தொடர்பான தற்கால நிலைமைகளை அவதானிக்கிற போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியும் விடயமாகும். முக்கியமான மாற்றங்கள்,

வழிபாட்டிடங்கள் நிரந்தர கோயில்களாக மாற்றப்பட்டுள்ளமை.

மெளனகுரு அவர்கள், இக்கோயில்கள் பற்றி விபரிக்கும் போது, மண்ணாலோ, கல்லாலே கட்டப்பட்ட தனிப்பட்ட கோயில் கிடையாது. (கிராமத்தின் அல்லது காட்டின்  மத்தியிலுள்ள குறிக்கப்பட்ட மரம் ஓன்றே கோயிலுக்குரிய நிலையமாகும்.) எனவும் பந்தலிட்டு இலை, குழை, தென்னை ஓலை, காட்டுப் பூக்கள் ஆகியவற்றாற் பந்தலை அலங்காரம் செய்து தெய்வங்களுக்கு விசேட பூஜை செய்வர். எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் தற்காலத்தில் தளவாய்க் கோவிலும் ஜெயந்தி புரம் கோவிலும் கிரான் குமார ஆலயமும் நிரந்தர கட்டடங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் ஏனைய தெய்வங்களிற்கும் கல்லினால் நிரந்தரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வருடாந்தச் சடங்கின் போது கொத்துப் பந்தல் போடும் முறை பின்பற்றப்படுகிறது.

குமாரர் ஆலயங்கள் முருகன் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளமை.

தளவாய்க் கோயிலும், ஜெயந்திபுரம் (கருவெப்பங்கேணி) கோயிலும் முருகன் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயந்திபுரம் கோவிலில் முன்னர் குமாரர் இருந்து இடத்தில் தற்போது முருகன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.  மூலஸ்தானத்தில் இருந்த குமாரர் மாற்றப்பட்டு பாலமுருகன் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளார். குமாரருக்கு தனிக்கோவில் அருகில் அமைக்கப்பட்டு, அதில் குமார் வைக்கப்பட்டுள்ளார். 

கோயிலின் பெயரும் முருகன்(குமாரர்) என்றே குறிப்பிடப்படுகிறது. தளவாயிலும் இவ்வாறான மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. புரதான தெய்வமாக முருகன் வைக்கப்பட்டுள்ளார். அதன் அருகில் குமாரர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

குமாரருக்குரிய வழிபாட்டுமுறை வருடாந்தம் நடைபெறும் சடங்கு ஆகும். இச் சடங்கு பாரம்பரிய முறையில் நடைபெறும். எனினும் தற்காலத்தில் குமாரர் கோவில்கள் முருகன் கோவில்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் பூசை முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜெயந்திபுரம் கோவிலில் குமாரருக்கும் ஆகம முறைப்படி ஐயரினால் பூசை நடைபெறுகிறது. குமாரர் சுப்பிரமணியர் எனக் குறிப்பிடப்படுகிறார். தளவாய்க் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் பூசாரியினால் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. கிரான் குமார ஆலயத்தில் விசேட வழிபாடுகள் பூசாரியினால் மேற்கொள்ளப்படுகிறது. (ஆயினும் இவ்வாறு வழிபாடு நடத்தப்படுவது குறித்து முரண்பாடுகள் நிலவுகிறது.)
ஜெயந்தி புரம் கோவில் வருடாந்த திருவிழா, குமார சடங்குடனேயே ஆரம்பிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ள. அச்சடங்கினை வேடர்கள் வழிவந்தேர் பாரம்பரிய முறையில் செய்துவருகின்றனர். கடந்த வருடம் (2013) வெளியிடத்திலிருந்து வேடர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பாரம்பரிய முறையில் சடங்கினை செய்வதற்கு பல தடைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆயினும் தளவாய், கிரான் கோயில்களில் வருடாந்த சடங்கு வழமை போல் பாரம்பரிய முறையில் நடைபெறுகின்றன. அச்சடங்கில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து போதிய தகவல்கள் இல்லை.
சித்தாண்டி குமாரர் ஆலயம், சித்தாண்டி முருகன் கோவிலின் பின் வீதியில் தனியாக அமைந்திருக்கிறது. அதற்கென தனிப்பட பாரம்பரிய முறையிலமைந்த சடங்கு நடைபெற்று வருகிறது.
இதனை விட கிரான், சித்தாண்டி குமாரர் தெய்வம் லாவானை எனும் இடத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. லாவானை எனுமிடத்தில் தற்போது மேடு ஒன்றில் குமார தெய்வச் சடங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
குமார தெய்வம் மற்றும் குமாரர் வழிபாட்டு முறையான சடங்கு வேடர், வேடர் வழிவந்தோருக்குரியதாக தளவாய், ஜெயந்திபுரம் ஆகிய இடங்களில் நிலவியிருக்கிறது.  லாவாணை அல்லது லாவணி எனுமிடத்திலும் முன்னர் வேடருடன் தொடர்பு பட்டே அமைந்துள்ளது. எனினும் சித்தாண்டி, கிரான் ஆகிய இடங்களில் வேடர்களுடன் தொடர்புகள் குறித்த தகவல்கள் காணப்படுகிற போதிலும் ஊர்குடிகளே இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

திங்கள், 9 மார்ச், 2015

மட்டக்களப்பு பிரதேசம் - அறிமுகம்

மட்டக்களப்பு பிரதேசம் - அறிமுகம்
இலங்கையின் கிழக்கக் கரையோரத்தில்> கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள மட்டக்களப்புப் பிரதேசத்தின் எல்லைகள் காலத்திற்குக் காலம் மாற்றமுற்று வந்துள்ளன.
பண்டைய மட்டக்களப்பானது வடக்கே வெருகலாற்றையும்> கிழக்கே வங்காள விரிகுடாவினையும்> மேற்கே ஊவா மலைத்தொடர் வெல்லஸ பிரிவினையும்> தெற்கே மாணிக்க கங்கையினையும் கொண்ட ஒரு பரந்த நிலப்பிரதேசமாக விளங்கியதுடன் மட்டக்களப்பு தமிழகம் எனவும் அழைக்கப்பட்டது.
கிழக்கே அமைந்துள்ள நீண்ட கடற்கரைப் பிரதேசங்கள் நெய்தல் நிலமாக கொள்ளப்படுகிறது. மேற்கில் அமைந்துள்ள பரந்த பிரதேசம் காடு> வயல்> சிறு குன்றுகள் கொண்டமைந்திருப்பதனால் அவை முல்லை> மருதம்> குறிஞ்சி நிலங்களாகக் கொள்ளப்படுகின்றன.
மட்டக்களப்பின் மத்தியில் நீணடமைந்துள்ள மட்டக்களப்பு வாவி> மட்டக்களப்பு பிரதேசத்தினை எழுவான்கரை> படுவான்கரை என இரு பிரதான பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது. வாவியின் கிழக்கே அமைந்துள்ள பிரதேசம் எழுவான்கரை. மேற்கே அமைந்துள்ள பிரதேசம் படுவான்கரை. மட்டக்களப்பு பற்றிய எழுத்திலும் பேச்சிலும் இவ்வழக்கு பொதுவாகப் பயன்பாட்டிலுள்ளது.
பண்டைய மட்டக்களப்புத் தமிழகம் புவியியல் ரீதியில் ஏனைய பிரதேசங்களிலிருந்து தனிமைப்பட்ட பிரதேசமாக விளங்கியது. மேற்கே மலைத்தொடர்கள், மகாவலி கங்கை மற்றும் அதன் கிளையாறுகள்> வடக்கே வெருகல் ஆறு, தெற்கே குமுக்கன் ஆறு> கிழக்கே வங்காள விரிகுடா என்பன அமைந்திருந்தமையால் இத் தனிமைப்பட்ட புவியியல் பண்பு ஏற்பட்டது. இதனால் வரலாறு> மொழி> பண்பாடு> சமூகக் கட்டமைப்பு என்பவற்றில் தனித்துமான தன்மைகள் ஏற்பட்டன. முக்கியமாக தனித்துவமான பண்பாட்டமசங்களை இன்றும் காணமுடிகிறது.
மிக அண்மைக்காலம் வரை மட்டக்களப்பிற்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கமான தரை வழித்தொடர்பும் விரித்தியடைந்திருக்கவில்லை. 1872இல் வரையப்பட்ட இலங்கைத் தேசப்படத்தில் மட்டக்களப்பிலிருந்து கண்டிக்குச் செல்வதற்கான தரைவழிப்பாதை ஒன்று மட்டுமே காட்டப்பட்டிருந்தது. மட்டக்களப்பு வாவியினால் பிரிக்கப்பட்டிருந்த பிரதேசங்களுக்கான தரை வழித்தொடர்பும் ஐரோப்பியராட்சியின் பின்னர் பாலங்கள் மற்றும் வீதிகள் அமைக்கப்பட்ட பின்னரே வளர்ச்சியடைந்தது.
கி.பி.1832 இல் கோல்புறூக் ஆணைக்குழு இலங்கையின் மாகாண எல்லைகள் குறித்து வெளியிட்ட  படத்தில்> கிழக்க மாகாணத்தின் மேற்கு எல்லையாக மகாவலி கங்கையின் கிழக்குப் பக்க கிளை ஆறு குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் மீளவரையப்பட்ட படத்தில் விந்தனைப் பகுதி ஊவா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பட்டிப்பளை (கல்லோயா) ஆற்றுச் சமவெளியின் ஒரு பகுதியும் மாத்தளை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில்(1948) மட்டக்களப்பு 6998 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் 202>987 சனத்தொகையையும் கொண்டதொரு பிரதேசமாக விளங்கியது. 1963 ஆம் ஆண்டின் இலங்கை சனத்தொகை கணிப்பீட்டில் தெற்கே குமுக்கன் ஆறு மட்டக்களப்பின் எல்லையாக குறிக்கப்பட்டிருந்ததுடன், 951.6 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டதொரு பிரதேசமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்ப தமிழகத்தின் தெற்கில்> 1952 இல் கல்லோயாக் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டதுடன் பெருமளவு சிங்கள மக்களும் குடியேற்றப்பட்டதுடன், அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதனால் தற்போது, தெற்கே அம்பாறை மாவட்டம் எல்லையாக உள்ளது. மேற்கே பொலன்னறுவை மாவட்டம் எல்லையாக உள்ளன.
தற்போது, மட்டக்களப்பு மாவட்டம் தெற்கிலும் தென்மேற்கிலும் அம்பாறை மாவட்டத்தையும், மேற்கிலும் வடமேற்கிலும் பொலன்னறுவை மாவட்டத்தையம் எல்லைகளாகக் கொண்டும் 2633.2 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் 393>413 மக்களையும்(2004) கொண்டதொரு பிரதேசமாகவும் குறிப்பிடப்படுகிறது. அண்மைய சனத்தொகைக் கணிப்பீட்டின் (2012) படி மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை 525>142 ஆகும். இதில் தமிழர்கள் 381>285 ஆகும். இது மொத்த மவாட்ட சனத்தெகையில் 72.6 சதவீதமாகும். முஸ்லிம்கள் 133>844 ஆகும். இது 25.5 சதவீதமாகும். சிங்களவர் 6>127 பேர் வாழ்கின்றனர். இவர்களின் சதவீதம் 1.2 ஆகும்.

மட்டக்களப்பு கடல் மட்டத்திலிருந்து 7.62 மீற்றருக்கு மேற்படாத உயரத்தினைக் கொண்ட சமதரைப் பிரதேசமாகவும் விளங்குகிறது.

வியாழன், 1 ஜனவரி, 2015

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் - 2015


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் - 2015
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல், 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 15 மில்லியன் வாக்களார்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 72 சதவீதத்தினர் சிங்களவர்> 12 சதவீதத்தினர் இலங்கைத் தமிழர்கள்> 9 சதவீதத்தினர் முஸ்லிம்கள்> 6 சதவீதத்தினர் மலையகத் தமிழர்.
இத் தேர்தலில் 19 பேர் போட்டியிடுகின்ற போதிலும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையிலேயே நேரடிப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போது “மகிந்த ராஜபக்ஷ அணி” பலமானதொரு அணியாகவே விளங்கியது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குள்ள வரம்பற்ற அதிகாரங்கள் – வரப்பிரசாதங்கள்> பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலம்> மகிந்த ராஜபக்ஷவின்; குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுக்கள் – பொறுப்புக்கள்> வடக்கு மாகாண சபை தவிர்ந்த ஏனைய மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரம்> உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்கள் என மிகப்பெரும் பலமிக்க அணியாகேவே விளங்கியது.
இதற்கப்பால் பௌத்த பேரினவாத செல்வாக்குக் கொண்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஆதரவும் அவராட்சிக்கு இருந்து வந்தது. எதிர்க்கட்சியின் பலவீனமான நிலையும் ஆளும் தரப்புக்குச் சாதகமாகவே அமைந்திருந்தது.
சிறுபாண்மை இனங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்> மலையகத் தமிழர்களின் வாக்குப் பலம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் அவருடன் இணைந்திருந்தன. வட - கிழக்கில் அவர் தனது ஆதரவுத்தளத்தைப் பெருக்குவதில் பெருமுயற்சிகளை மேற்கொண்டு சிறு வெற்றிகளையும் பெற்றிருந்தார்.
சீனாவின் நிபந்தனையற்ற ஆதரவு> இந்தியாவின் தலையீடின்மை எனப் பலவழிகளிலும் “மகிந்த ராஜபக்ஷ அணி” பலமானதொரு அணியாகவே விளங்கியது. இந்தப் பலமான நிலை அவர்களை “எதையும்” செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றது.
இந்தப் பலமான நிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டு நிழலுடன் தான் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வரை பொது எதிரணி பலவீனமானமானதொன்றாகவே தோற்றமளித்தது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி> முன்னாள் ஐனாதிபதியான சந்திரிகா மற்றும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் சிலரும் இணைந்து பொது எதிரணி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை அறிவித்துக் களமிறங்கியதுடன்- பொது எதிராணி பலமான எதிராணியாக மாற்றமுற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்> அமைச்சர் என ஆளும் கட்சியின் முக்கியஸ்தராக இருந்தவரும் முதல் நாள் ஜனாதிபதியின் அலரிமாளிகையில் “ஜனாதிபதியுடன் ஒன்றாக இருந்து முட்டை அப்பம் உண்ட” வருமான மைத்திரிபால சிறிசேனா சில முக்கிய சகாக்ககளுடன் பிரிந்து வந்து பொது எதிரணியில் இணைந்து கொண்டு> பொது வேட்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து ஆளும் தரப்பிலிருந்து பலர் எதிரணிக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு முக்கியமானதும் இனவாத நிலைப்பாடு கொண்டதுமான ஜாதிக ஹெல உறுமயவும் பொது எதிரணி வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கெதிரான பிரச்சாரம் ஒன்றைத் தனித்து நின்று நடாத்தி வருகிறது.
ஆளும் கட்சியுடன் இணைந்திருந்த முஸ்லிம்கள் சார்பிலான கட்சிகளில் பல பொது எதிரணியுடண் இணைந்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதிநேரத்தில் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
மலையக மக்கள் விடுதலை முன்னணி கட்சி சார்பாக பொது எதிரணிக்கு தனது ஆதரவினைத் தெரிவித்திருக்கிறது. எனினும் அக்கட்சியின் தலைவி மகிந்த ராஜபக்ஸவிற்கு தனது ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார். வேறு சிலர் எதிரணிக்கு மாறியிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மகிந்தவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தீவிரவமாக ஈடுபட்டும் வருகிறது. பொதுபலசேனா எனும் பௌத்த தீவிரவாத அமைப்பு மகிந்தவிற்கு ஆதரவினை வழங்கியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சிலர் மகிந்தவுடன் இணைந்திருக்கிறார்கள்.

பல்வேறு தரப்பினரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் எனக் குறிப்பிட்டு வருவதுடன்> பல்வேறு அரசியல் கட்சிகள்> மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்கள்.

பதவிக்காலம் இரு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் தனது வெற்றிக்கான வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார் மகிந்த ராஜபக்ஷ. ஆனால் இன்றைய களநிலவரமானது, “இலங்கை வாக்காளர்களுக்கு ஜனநாயக ரிதியான தெரிவை மேற்கொள்வதற்கு எதிர்பாராத ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது” என்பதாகவே அமைந்திருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தல் சுமகமாக நடைபெறுமா? ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது நாடு சர்வாதிகரப் போக்கிற்குள் தள்ளப்படுமா? என்ற வினாக்கள் நிலவுகிற போதிலும் தேர்தல் பிரச்சாரங்கள் வன்முறைகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
Vijey - 01.01.2015